search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் அருகே நிலத்தை அபகரிக்க விஷ ஊசி செலுத்தி கணவனை கொல்ல முயன்ற பெண்
    X

    திருப்பூர் அருகே நிலத்தை அபகரிக்க விஷ ஊசி செலுத்தி கணவனை கொல்ல முயன்ற பெண்

    • கடந்த 15-ந்தேதி பொங்கலன்று சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவருக்கு தேவி ஊசி ஒன்றை செலுத்தியுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 48). விவசாயியான இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் இவருக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்து வந்தது.

    புரோக்கர் மூலம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார். இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில் சுப்பிரமணி தாயாருக்கும், தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சுப்பிரமணியின் தாயார் அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து தேவி, சுப்பிரமணியிடம் தாயார், சகோதரியிடம் கையெழுத்து வாங்கி விட்டு 2 ஏக்கர் நிலத்தை விற்று விடுங்கள். நாம் திண்டுக்கல்லுக்கு சென்று வசிப்போம் என தெரிவித்துள்ளார். இதற்கு சுப்பிரமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    கடந்த 15-ந்தேதி பொங்கலன்று சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவருக்கு தேவி ஊசி ஒன்றை செலுத்தியுள்ளார். சுப்பிரமணி, எதற்காக ஊசி செலுத்துகிறாய் என்று கேட்ட போது காய்ச்சல் குணமாவதற்காக செலுத்துவதாக தெரிவித்துள்ளார். அந்த ஊசி செலுத்தியதும் சிறிது நேரத்தில் சுப்பிரமணி மயக்கமடைந்தார்.

    பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சுய நினைவை இழந்தார். இதையடுத்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுய நினைவு திரும்பியது.

    சுப்பிரமணிக்கு சுய நினைவு திரும்பாத வரை அவரது அருகில் இருந்து கவனித்து கொண்ட தேவி, சுய நினைவு திரும்பியதும் ஆஸ்பத்திரியில் இருந்து சென்று விட்டார். இது சுப்பிரமணியின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    எனவே இது குறித்து குன்னத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேவி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    அவர் எதற்காக கணவருக்கு ஊசி செலுத்தினார்?, அது விஷ ஊசியா?, நிலத்தை அபகரிக்க விஷ ஊசி செலுத்தி கணவரை கொல்ல முயன்றாரா ? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குன்னத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×