என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆவடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை
- மூதாட்டி சாவித்திரியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, பொதிகை நகர், பவானி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சாவித்திரி (வயது 71). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது 3 மகன்கள் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
இதையடுத்து மூதாட்டி சாவித்திரி மட்டும் வீட்டில் தனியாக தங்கி இருந்தார். அவரை குடும்பத்தினர் அடிக்கடி சந்தித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு மூதாட்டி சாவித்திரியை பார்ப்பதற்காக அவரது மூத்தமகன் வழி பேரன் ஜெகன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் பாட்டி சாவித்திரி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தலையில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. அறை முழுவதும் ரத்தக்கறையாக காணப்பட்டது. இதனால் அதிர்ந்து போன ஜெகன் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மூதாட்டி சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டி சாவித்திரியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட சாவித்திரி 3 வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளார். அதில் வரும் பணத்தை அவர் சேமித்து வைத்து இருந்ததாக தெரிகிறது. எனவே வீட்டில் நகை-பணம் இருப்பதை அறிந்து அதனை கொள்ளையடிகும் முயற்சியில் இந்த கொலை நடந்ததா? என்றும் விசாரித்து வருகிறார்கள். ஆனால் வீட்டில் இருந்த நகை-பணம் கொள்ளை போக வில்லை என்று தெரிகிறது.
மேலும் அவரது வீட்டின் அருகே மற்ற வீடுகள் உள்ளன. ஆனால் கொலை நடந்த போது அலறல் சத்தம் வெளியில் கேட்கவில்லை. இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அருகில் வசிப்பவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல் சொத்து தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






