என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம்.
விருத்தாசலத்தில் பஸ் அதிபர் வீட்டில் 45 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி கொள்ளை
- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் ரோஜாபூ தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 63).
- கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் ரோஜாபூ தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 63). பஸ் அதிபர்.
இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று அதிகாலை பஸ் அதிபர் ஜெயச்சந்திரன் வீடு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.
இதனால் அவருக்கு மேலும் பதட்டம் அதிகமானது. பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 45 பவுன் தங்க ஆபரணங்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனால் பதறிபோன ஜெயச்சந்திரன் இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.






