என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இறந்த நண்பர் அழைப்பதாக கூறி மதுவில் விஷம் கலந்து குடித்து கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை
- இறந்த ரவிக்குமார் தன்னை கூப்பிடுவதாக அடிக்கடி கோவிந்தராசு கூறி வந்துள்ளார்.
- கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த ஓம் சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு (41). இவர் சலங்கபாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பவளக்கொடி (40). இவர் பெ.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
பெ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கோவிந்தராசின் நெருங்கிய நண்பராக இருந்தார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இதன் பின்னர் இறந்த ரவிக்குமார் தன்னை கூப்பிடுவதாக அடிக்கடி கோவிந்தராசு கூறி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பெ.மேட்டுப்பாளையம் வெங்கமேடு மணிக்காரர் தோட்டம் அருகே உள்ள தென்னை மரத்தடியில் கோவிந்தராசு மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரது அருகே மது பாட்டில் மற்றும் விஷ மருந்து டப்பா இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கோவிந்தராசை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து கோவிந்தராசு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






