search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 127 இடங்களில் செயல்படும் விஜய் பயிலகம்- கனடா நாட்டிலும் தொடக்கம்
    X

    தமிழகத்தில் 127 இடங்களில் செயல்படும் 'விஜய் பயிலகம்'- கனடா நாட்டிலும் தொடக்கம்

    • பயிலகத்தில் ஏராளமான ஏழை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.
    • மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு பயிலகத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதில் மாணவ, மாணவிகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு திட்டமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்சி, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை சென்னைக்கு அழைத்து பரிசு வழங்கி ஊக்குவித்தார்.

    இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்தநாளான கடந்த ஜூலை 15-ந் தேதி ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தொகுதி வாரியாக, தளபதி 'விஜய் பயிலகம்' என்ற இரவு நேர பாட சாலை விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பயிலகத்தில் ஏராளமான ஏழை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.

    முதல் நாள் தமிழகம் முழுவதும் 10 இடங்களில் தொடங்கப்பட்ட பயிலகம் தற்போது 127 இடங்களில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், சென்னையில் 7 இடங்களிலும் கன்னியாகுமரியில் 7 இடங்களில், புதுச்சேரியில் 2 இடங்கள் என தமிழகம் முழுவதும் 127 இடங்களில் பயிலகம் நடந்து வருகிறது.

    சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு பயிலகத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம், புதுச்சேரியை தொடர்ந்து கனடாவிலும் வருகிற 9-ந் தேதி விஜய் பயிலகம் அங்கு வாழும் தமிழர்களின் குழந்தைகளின் படிப்புக்காக தொடங்கப்பட உள்ளது.

    கனடா நாட்டின் விஜய் மக்கள் இயக்க தலைவராக இருக்கும் கார்த்திக் தலைமையில் இந்த திட்டம் அங்கு தொடங்கப்பட உள்ளது.

    முதன் முதலாக 6 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும். முதற்கட்டமாக ஆன்லைன் மூலமும் தொடர்ந்து தனியாக வகுப்புகளிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிலகத்தில் செல்வி என்ற தமிழ் ஆசிரியை உள்பட பலர் வகுப்புகள் எடுக்க உள்ளனர்.

    பயிலகத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக கார்த்திக், பாலாஜி, ஜனனி, அர்ச்சனா, மணிகண்டன், பத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக 20 குழந்தைகள் பயிலகத்தில் சேர பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் ஆலோசனையின் பேரில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள திட்டமான தளபதி பயிலகத்துக்கு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் எதிர்பார்க்காத வண்ணம் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து பயிலகத்தின் எண்ணிக்கையும் விரிவுபடுத்தி கொண்டு வருகிறோம்.

    தமிழகத்தை தொடர்ந்து கனடாவிலும் பயிலகம் தொடங்கப்பட உள்ளது. மக்கள் இயக்கம் உள்ள அனைத்து பகுதிகளிலும் பயிலகம் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

    மேலும் அவர் கூறுகையில் வ.உ.சி. பிறந்த நாளான, இன்று ஆண்டிமடத்தில் உள்ள அவரது சிலைக்கு மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தொடர்ந்து புதிய பயிலகம் தொடக்க விழாவும், குழந்தைகளுக்கு பால், ரொட்டி, முட்டை வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது.

    Next Story
    ×