என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு
    X

    சென்னையில் விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

    • சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • வடமாநிலத்தவா்கள், பெருமளவு விமானங்களில் செல்வதால் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளன.

    ஆலந்தூர்:

    தீபாவளி விடுமுறை, அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு விடுமுறை தொடர்ச்சியாக வருவதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று, தீபாவளியை கொண்டாட புறப்பட்டு செல்கின்றனா்.

    இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இறுதி நேரத்தில் பயணிகள் பலா், விமானங்களில், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் சென்னை விமான நிலையத்தை நோக்கி படையெடுப்பதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை பயணிகள் பயணம் செய்கின்றனர். அது தற்போது, 50 ஆயிரத்தையும் கடந்து இருக்கிறது.

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததையொட்டி, விமானங்களின் பயண கட்டணமும், பல மடங்கு உயர்ந்துள்ளது.

    தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால், சென்னையில் உள்ள வடமாநிலத்தவா்கள், பெருமளவு விமானங்களில் செல்வதால் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளன.

    சென்னை-டெல்லி இடையே வழக்கமான கட்ட ணம் ரூ. 6,000. தற்போது ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை உள்ளது.

    சென்னை-கொல்கத்தா வழக்கமான கட்டணம் ரூ.6,500. தற்போது ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை உள்ளது.

    சென்னை-புவனேஸ்வர் வழக்கமான கட்டணம் ரூ.6,000. தற்போது ரூ.11,000 முதல் ரூ.13,000 வரை உள்ளது.

    சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,500. தற்போது ரூ.9,000 ஆகும்.

    சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,000. தற்போது ரூ.12,000 முதல் 21,000 வரை ஆகும்.

    தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களான சென்னை-மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,200. தற்போது ரூ.12,000. சென்னை-திருச்சி வழக்கமாக ரூ.3,500.ஆனால் தற்போது ரூ.11,500.சென்னை தூத்துக்குடி வழக்கமாக ரூ.4,500. தற்போது ரூ.9,500 முதல் ரூ.11,500 வரை ஆகும். சென்னை கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,500. தற்போது ரூ.11,500 ஆகும்.

    விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்தாலும் பயணிகள் தங்களுடைய சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடும் ஆா்வத்தில், கட்டணம் பற்றி யோசிக்காமல், ஆர்வமுடன் டிக்கெட் எடுத்து விமானங்களில் பயணிக்கின்றனர்.

    இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "முக்கியமான திருவிழாக்களின் போது பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் காரணத்தால், குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகி விடுகின்றது. அதிக கட்டணம் டிக்கெட்டுகள் மட்டுமே இருக்கின்றன.

    எனவே வேறு வழியின்றி பயணிகளுக்கு அதிக கட்டண டிக்கெட் தான் இருக்கிறது என்று கூறுகிறோம். பயணிகள் கட்டணம் பற்றி பொருட்படுத்தாமல், பயணிக்கின்றனா். அதிக கட்டணம் கொடுப்பதை தவிா்க்க, பயணிகள் முன்னதாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தால், தற்போது குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×