search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகர பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது

    • ஜனவரி 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த டோக்கன்கள் வழங்கப்படும்.
    • பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 2022 (அரையாண்டிற்கு ஒருமுறை) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

    தற்பொழுது அடுத்த அரையாண்டிற்கு ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகிய பணிகள் இன்று தொடங்கியது.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) மூத்த குடிமக்கள் சென்னையில் உள்ள 27 மையங்களுக்கு சென்று பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்க டோக்கன்களை பெற்றுக்கொண்டனர்.

    அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பஸ் நிலையம், மத்திய பணிமனை, சென்ட்ரல் பஸ் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி, பெரம்பூர் பஸ் நிலையம், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர் ஆகிய 27 மையங்களில் டோக்கன் வழங்கப்படுகிறது.

    ஜனவரி 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த டோக்கன்கள் வழங்கப்படும். அதன் பின்னர் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

    மூத்த குடிமக்கள், கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பித்தனர்.

    சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசல் சான்றிதழ்களை கையில் வைத்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×