என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்டெடுக்க உறுதி ஏற்க வேண்டும்- ராமதாஸ் டுவிட்டர் பதிவு
- மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம்.
- நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். அது தான் தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்கள் அநீதிகளை எதிர்கொள்வதற்கும், தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும் காரணமாகும். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.
தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 1.11.1956 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அறிஞர் அண்ணா 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி தான் சூட்டினார். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன் கொண்டாட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






