என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் தண்ணீர் தேடி அலையும் பறவைகளை படத்தில் காணலாம்.
கொடைக்கானலில் தண்ணீர் தேடி அலையும் அபூர்வ பறவைகள்
- பறவைகளின் தண்ணீர் தேவையை மனிதர்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும்.
- தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் மே மாதம் தொடங்கியதில் இருந்து கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் காரணமாக மேலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் காணப்படுவதை போல கொடைக்கானலிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மனிதர்களுக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ள சூழலில் பறவைகளும் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த மாதம் ஒரு சில நாட்கள் பெய்த மழையினால் நீர் நிலைகள் ஓரளவு நிரம்பின. ஆனால் வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் தொடர்ந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் தண்ணீரைத் தேடி பறவைகளும் சுற்றித் திரிகிறது. கொடைக்கானலில் நீர் நிலைகளுக்கு அருகே இருக்கக்கூடிய காடுகளில் பல்வேறு அரிய வகை பறவைகள் உள்ளன. மற்ற காலங்களை விட தற்போது இனப்பெருக்க காலமும் இந்த மாதம் தான் நடக்கும். ஆனால் பறவைகள் தண்ணீருக்கே தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறு இடங்களுக்கு பறந்து வருவதை குடியிருப்பு பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
பறவைகளின் தண்ணீர் தேவையை மனிதர்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் சுற்றி வரக்கூடிய சிட்டுக்குருவிகள், வெள்ளைக்கண்ணி, புள்ளி புறா, சிவப்பு மீசை சின்னான் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தண்ணீர் மற்றும் உணவுகள் இன்றி தவித்து வருகிறது. இதனை போக்குவதற்காக மனிதர்கள் தங்களுடைய வீட்டு மொட்டை மாடிகளில் தானியங்கள் மற்றும் தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வைக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வனங்களை விட்டு வெளியே வராத பறவைகளும் இருக்கின்றன. இதற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் இன்றி உயிரிழக்கக்கூடிய பறவைகள் மற்றும் பறவை இனங்களை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.






