search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குவாரிகள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்:  கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் அபாயம்: முதலமைச்சர் தலையிட கோரிக்கை
    X

    குவாரிகள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்: கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் அபாயம்: முதலமைச்சர் தலையிட கோரிக்கை

    • மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு கட்டுமான தொழில் முழுமையாக ஸ்தம்பித்து விட்டது.
    • கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 2500 கல்குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வந்தன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளுக்கும் கனிம வளத் தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும் அத்தியாவசிய தேவையானதாகவும் உள்ளது.

    தற்போது பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை சிறிய மிரைல் என்றழைக்கப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால் ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

    இது ஒருபுறம் இருக்க, சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல் பரப்புவதால் குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குவாரிகளில் பல்வேறு குறைகளை கண்டறிந்து பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி. கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கினார்கள்

    இதன் காரணமாக 2 ஆயிரத்து 500 கல் குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்கவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு கட்டுமான தொழில் முழுமையாக ஸ்தம்பித்து விட்டது. சென்னையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனிம வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு தலைவர்கள், லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆனாலும் இந்த விஷயத்தில் அரசு இன்னும் இணக்கமான முடிவை அறிவிக்காததால் போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. குவாரிகள் மட்டுமின்றி கட்டுமான தொழில்கள் அனைத்தும் முடங்கி உள்ளதால் இந்த விஷயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குவாரி அதிபர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×