என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியால் அரசியல் கட்சி கொடி, சின்னங்கள் விற்பனை மந்தம்
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- அரசியல் கட்சியினரின் வேட்டி, சேலைகளை அணிந்து கட்சி உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை விநியோகிப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். கார்களில் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கும் கட்சிக் கொடிகளையும் அகற்றி வருகின்றனர்.
மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர், அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் கட்சியினர் முகாமிட்டு தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க ஈரோடு மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி.ரோடு போன்ற கடை வீதிகளில் தேர்தலையொட்டி தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி, அ.ம.மு.க உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரின் கட்சிக் கொடிகள், சின்னங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அதிகாரிகள் கெடுபிடியால் அரசியல் கட்சி கொடிகள் சின்னங்கள் விற்பனை மந்த நிலையில் உள்ளது. அனுமதியின்றி வாகனங்களில் கட்டி வரப்படும் அரசியல் கட்சியினரின் கொடிகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.
அதே நேரம் அரசியல் கட்சியினர்களின் வேட்டி, சேலைகள், துண்டுகள் விற்பனை ஓரளவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர் துண்டுகள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் அரசியல் கட்சியினர் வேட்டிகள் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலைகள் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. அரசியல் கட்சியினரின் வேட்டி, சேலைகளை அணிந்து கட்சி உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.






