search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்துமஸ் பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து
    X

    கிறிஸ்துமஸ் பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து

    • இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்.
    • போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    அன்பின் திருஉருவம், கருணையின் மறுவடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் அன்பு காட்டி, இறைவனின் தூதுவராக, கருணையின் வடிவமாக விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து சமூக சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தினர். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் என பல அளப்பரிய பணிகளின் மூலம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கு, பாதுகாவலாக கிறிஸ்துவ மதம் விளங்குகிறது.

    மிகச்சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும். உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    இயேசு நமக்கு வழங்கிய போதனைகளின்படி, உலகில் அன்பு மட்டுமே அனைவரையும் ஆட்சி செய்வதை உறுதி செய்வோம். இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    இயேசு கிறிஸ்து போதித்த மனிதநேய நெறிகளைப் போற்றிப் பின்பற்றவும், சாதி-சமய வேற்றுமைகளைக் கடந்து சகோதரத்துவம், தமிழகத்தில் மேலோங்கவும் கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளில் உறுதி கொள்வோம். உலகெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், கிறிஸ்தவப் பெருமக்களுக்கு ம.தி.மு.க. வின் சார்பில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையானது ஒற்றுமையை, அமைதியை வலியுறுத்துகிறது. அந்த வகையில் கிறிஸ்தவர்கள் அனைவரிடமும் அன்போடு, ஒற்றுமையாக நட்புறவோடு பழகுவது தனிச்சிறப்பு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும், இயேசுவை வரவேற்கும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    அன்பையும், பொறுமையையும் மனித சமுதாயத்திற்கு போதித்த இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இயேசுநாதரின் சொற்களை மனதில் நிறுத்தி அனைவரிடமும் அன்பு செலுத்திடுவோம். உலகெங்கும் அமைதி நிலவி, மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட கிறிஸ்துமஸ் நாளில் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இயேசு போதனைகளை பின்பற்றி, உலக மக்களிடையே சகோதரத்துவமும், சமாதானமும் கருணை எண்ணமும் தழைத்தோங்கட்டும். கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் மக்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    இயேசுவின் போதைகளை ஏற்று அமைதியாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அன்பு பாராட்டி, பிறருக்கு உதவி செய்து, மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து தனிமனித ஆசையை அடக்கி வாழ்ந்தால் உலகில் மனித குலம் செழிக்கும். இயேசுவின் போதைகளை ஏற்று நாமும் கடைபிடித்து வாழ்ந்திட அவர் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் நாளில் உறுதி ஏற்போம்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    தமிழகத்திலே சிறுபான்மையினரால இருக்கக் கூடிய கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக அரசு அரணாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொண்டிருக்கிறது. அனைவரும் இயேசு போதித்த அன்பை மனதில் கொண்டு அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்:-

    இயேசு நாதர் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் நாளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த காலம் அன்பின் காலம், கிருபையின் காலம் என்று அழைக்கப்படுகிறது. இயேசுவானவரின் பிறப்பின்போது வான தூதா்கள் "பூமியிலே சமாதானமும், மனுஷா்மேல் பிரியமும் உண்டாவதாக"-என்று கூறி கடவுளைத் துதித்தார்கள். அந்த வாழ்த்துக்கள் இன்றும் உலக மக்களுக்கு ஆசீா்வாதமாக அமைந்துள்ளது. இந்த இனிமையான கிறிஸ்துமஸ் காலத்தின் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன்:-

    நம் பொருளாலும் ஞானத்தினாலும் இவ்வுலகில் இருக்கும் எல்லோரையும் சுமக்க இந்த கிறிஸ்துமஸ் நாளில் உதித்த எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவராக இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு வழங்க வந்த அத்தனை பாக்கியங்களும் உங்கள் மீது வருவதாக.

    இவ்வாறு அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மேலும் வாழ்த்து தெரிவித்தவர்கள் விவரம்:-

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் எம்.எல்.ஏ.,

    Next Story
    ×