search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விரைவில் குழாய் மூலம் இயற்கை சமையல் கியாஸ்- 4,500 வீடுகள் இணைப்புக்காக தயார்
    X

    அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விரைவில் குழாய் மூலம் இயற்கை சமையல் கியாஸ்- 4,500 வீடுகள் இணைப்புக்காக தயார்

    • வல்லத்தில் உள்ள ஒரு நிலையத்தில் இருந்து தையூரில் உள்ள டிகம்பிரசிங் சிஸ்டம் யூனிட்டுக்கும் பின்னர் அடுக்குமாடி வீடுகளுக்கும் கியாஸ் வருகிறது.
    • குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்பை பெற பதிவு கட்டணம் ரூ.354 ஆகும்.

    சென்னை:

    வீடுகளுக்கு சமையல் கியாஸ் குழாய் மூலம் வினியோகம் செய்யும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னையை ஒட்டியுள்ள தகவல் தொழில்நுட்ப பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சமையல் கியாஸ் குழாய் பதிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

    கேளம்பாக்கம்- நாவலூர் இடையே இயற்கை கியாஸ் குழாய்களை அமைத்துள்ளது. படூர் அருகே உள்ள 1,200 அடுக்குமாடி குடியிருப்புகள் இணைப்புகளை பெற்றுள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு நிலத்தடி குழாய்கள் மூலம் சமையல் கியாஸ் இனி கிடைக்கும். வழக்கமான எல்.பி.ஜி. கியாஸ் அல்ல. குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.

    சுமார் 4,500 குடியிருப்புகள் இணைப்புக்காக ஏஜென்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 மாதங்களாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    வல்லத்தில் உள்ள ஒரு நிலையத்தில் இருந்து தையூரில் உள்ள டிகம்பிரசிங் சிஸ்டம் யூனிட்டுக்கும் பின்னர் அடுக்குமாடி வீடுகளுக்கும் கியாஸ் வருகிறது.

    தையூர் அலையன்ஸ் நகர்ப்புற வளாகத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் பழைய மகாபலிபுரம் உள்ளது. அதன் உட்புற சாலைகளில் 25 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்பை பெற பதிவு கட்டணம் ரூ.354 ஆகும். மேலும் பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.750-ம் உபகரண பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.6000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ஒரே தடவையாகயாகவோ அல்லது தவணையாகவோ செலுத்தலாம். ஓ.எம்.ஆர். குடியிருப்பு வாசிகள் ஏஜென்சியின் கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் இணைப்பை பெறலாம்.

    இதுகுறித்து ஏ.ஜி. அண்டு பி பிரதம் திருக்குமரன் கூறுகையில், 'சமையல் பயன்பாட்டு கட்டணத்தை தீர்மானிக்க பயன்பாடு அளவிடப்படும். எல்.பி.ஜியை விட இயற்கை எரிவாயு பாதுகாப்பானது என்பதால் மக்கள் பாதுகாப்பை பற்றி கவலைப்பட தேவையில்லை.

    அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர தனி வீடுகளை இணைப்பதையும் செய்து வருகிறோம். வல்லம் அருகே 140 தனி வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம். 90 நாட்களுக்குள் ஐ.டி. பகுதியில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முடியும் என்றார்.

    ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய இடங்களில் 700 கி.மீ. தூரத்திற்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வலையமைப்பு விரிவாக்கம் செய்யப்படுகிறது.

    Next Story
    ×