என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- கொடைக்கானலில் கடந்த மாதம் கடுமையான உறை பனி சீசன் நிலவி வந்தது.
- உள்ளூர் மக்களுக்கு சற்று பாதிப்பை தந்தாலும் சுற்றுலா பயணிகள் இந்த ரம்யமான சீதோசனத்தை உற்சாகமாக கண்டு ரசித்து செல்கின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த மாதம் கடுமையான உறைபனி சீசன் நிலவி வந்தது. வெப்ப நிலை 5 டிகிரி செல்சியசுக்கு கீழ் சென்றதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. உறை பனி மற்றும் பனிமூட்டத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக உறைபனி குறைந்து கடும் குளிர் நிலவி வந்தது.
கொடைக்கானல் இந்த வாரம் மலைப்பகுதியில் பகலில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் கடும் குளிரும் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இன்று மீண்டும் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் உறைபனி காணப்பட்டது. ஏரிச் சாலை, ஜிம்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புற்களில் பனி படர்ந்து காணப்பட்டது.
மேலும் வெப்பநிலை 8 டிகிரி செல்சியசுக்கு கீழ் பதிவாகி உள்ளது. திடீரென மாறிய இந்த காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கொடைக்கானலை மகிழ்வுடன் அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் தற்போது நிலவும் இந்த வித்தியாசமான காலநிலையை ரசித்து உற்சாகமடைந்தனர்.
தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் ஜனவரி இறுதி மாதம் வரை மட்டுமே இருக்கும் உறைபனி தற்போது பிப்ரவரி மாதத்தில் நிலவி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உள்ளூர் மக்களுக்கு சற்று பாதிப்பை தந்தாலும் சுற்றுலா பயணிகள் இந்த ரம்யமான சீதோசனத்தை உற்சாகமாக கண்டு ரசித்து செல்கின்றனர்.






