என் மலர்
தமிழ்நாடு

தி.நகரில் நெரிசலை குறைக்க எஸ்கலேட்டர் வசதிகளுடன் புதிய நடைபாதை மேம்பாலம்- பணிகள் தீவிரமாக நடக்கிறது
- புறநகர் மின்சார ரெயில்கள் மூலம் தி.நகருக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.
- போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தி.நகரில் புதிய நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை:
தி.நகரில் நெரிசலை குறைக்க "எஸ்கலேட்டர்" வசதிகளுடன் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையின் முக்கிய வியாபார ஸ்தலமாக தி.நகர் திகழ்ந்து வருகிறது.இங்கு துணி கடைகள், நகை கடைககள்,மற்றும் வீட்டுஉபயோகப் பொருள் கடைகள் ஏராளம் உள்ளன.இந்த கடைகளில் பொருட்கள் வாங்க தி.நகருக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் ரெங்கநாதன் தெரு, மேட்லி சாலை, உஸ்மான் ரோடு மார்க்கெட் தெரு என அனைத்திலும் மக்கள் கூட்டம் தினமும் அலைமோதுகிறது.மேலும் புறநகர் மின்சார ரெயில்கள் மூலம் தி.நகருக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் தி.நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தி.நகரில் புதிய நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தி.நகர் ரெயில்நிலையம்-பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நடைமேம்பாலம் 500 மீட்டர் நீளத்தில் ரூ.30 கோடி செலவில் நடக்கிறது. 30அடி உயரத்தில், 14 அடி அகலத்தில் இந்த நடை மேம்பாலம் தற்போது பிரமாண்டமாக அமைக்கப் பட்டு உள்ளது. இந்த நடை மேம்பாலத்தில் பயணிகள், பொதுமக்கள் எளிதில் ஏறி நடந்து செல்வதற்காக 2 "எஸ்கலேட்டர்கள்" மற்றும் சிமெண்ட் படிக்கட்டு வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
தி.நகர்-பஸ், ரெயில் நிலையம் இணைப்பு புதிய நடைமேம்பாலம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த புதிய நடை மேம்பாலம் திறக்கப்படும் போது தி.நகரில் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசல் குறையும்.பயணிகள், பொதுமக்கள் எளிதில் தி.நகருக்கு வந்து செல்ல முடியும்.