என் மலர்
தமிழ்நாடு

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: தமிழகம்-புதுச்சேரிக்கு கனமழைக்கு வாய்ப்பு
- இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை.
- சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (5-ந்தேதி) உருவாகிறது.
இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று கூறியதாவது:-
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
அதன்பின்னர் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 8-ந்தேதி வட தமிழகம், புதுவை கடலோர பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
7-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.