search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிப்காட் பகுதியில் தேங்கி உள்ள ஆலை கழிவு நீர் மறு சுழற்சி செய்ய புதிய முயற்சி
    X

    சிப்காட் பகுதியில் தேங்கி உள்ள ஆலை கழிவு நீர் மறு சுழற்சி செய்ய புதிய முயற்சி

    • நீரை பயன்படுத்திய பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • நிலத்தடி நீர் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக சாய கழிவு நீராக வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை மற்றும் பெருந்துறை பகுதிகளில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 2,700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்து உள்ளது.

    இந்த சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் அதிக அளவில் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு பொது மக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆனது. இந்த நீரை பயன்படுத்திய பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் மழை காலங்களில் இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப் பாதைகளும் குளங்களும் கழிவு நீரினால் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

    இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆலை நிர்வாகமே பூஜ்ஜியம் முறையில் மறுசுழற்சி செய்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த தொழிற்சாலை வளாகம் இருக்கக்கூடிய பகுதிகளில் ஏற்கனவே விவசாயிகள் அமைத்திருந்த ஆழ்துளை கிணறுகள் மூலமாக வெளியேற்றப்பட்ட கழிவுநீர் நிலத்தடியில் இன்னும் இருப்பதால் மழை க்காலங்களில் நிலத்தடி நீர் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக சாய கழிவு நீராக வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவின் படி குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதை மற்றும் பல இடங்களில் நிலத்தில் தேங்கி நிற்கின்ற கழிவு நீரை புதிய முயற்சியாக டேங்கர் லாரிகள் மூலமாக அந்த கழிவு நீரை சேகரித்து தொழிற்சாலைகளுக்கு எடுத்து சென்று அங்கு அமைக்கபட்டுள்ள ஜீரோ டிஸ்சார்ஸ் முறையில் சுத்திகரிப்பு எந்திரம் மூலமாக சுத்திகரிப்பு செய்து மீண்டும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கே எடுத்துக்கொள்ளும் புதிய முயற்சியை மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலமாக தொடங்கி உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த முயற்சி நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும். மேலும் இதற்கு இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

    மேலும் இங்கு வசிக்கும் மக்கள் கூறும்போது:-

    இப்பகுதியில் உள்ள குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையை கான்கிரீட் பாதையாக மாற்றி தடுப்பணை அமைத்து மழை காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகமும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

    மாசுகட்டுப்பாட்டு வாரி யம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி பலன் அளிக்குமா என்பது பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×