என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
    X

    மேட்டுப்பாளையம் அருகே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

    • வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.
    • ஆணைப்பள்ளி புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக ஆலாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த விஜய் ஆனந்த், விற்பனையாளராக குணசேகரன், உதவி விற்பனையாளராக கரியபெட்டன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த கடைக்கு நேற்று 3 பேர் வந்தனர். அவர்கள் விற்பனையாளர் குணசேகரன், உதவி விற்பனையாளர் கரியபெட்டன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் மதுபாட்டிலை எடுத்து கீழே போட்டு உடைத்தனர்.

    பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசி அதில் தீப்பற்ற வைத்தனர். இதனால் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது. அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

    இதுபற்றி கடை ஊழியர்கள் சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடினர்.

    இந்த சம்பவத்தில் ஆணைப்பள்ளி புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து தான் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடினர். இதில் கார்த்திக் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரிடம் கார்த்திக் கூறுகையில் எனக்கும், எனது மனைவிக்கும் தகராறு இருந்து வந்தது. எனது மனைவி என்னை பற்றி போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினார். நீ என்ன புகார் செய்வது, நானே பெரிய வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போகிறேன் என கூறி டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார்.

    கார்த்திக் கூறுவது உண்மை தானா என்று தெரியவில்லை. சமீபத்தில் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளரான விஜய்ஆனந்த், கடையில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்த சென்றபோது, மர்ம நபர்கள் அவரை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இந்த சம்பவத்துக்கும், பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே தப்பியோடிய 2 பேரை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 3 பேரையும் தனித்தனியாக விசாரிக்கும்பட்சத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் நம்புகிறார்கள்.

    Next Story
    ×