என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கவுன்சிலரின் மகன் திடீர் தற்கொலை- உருக்கமான கடிதம்
- கோபிநாத் தற்கொலை செய்து இருப்பது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோபிநாத்தின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மடிப்பாக்கம் அடுத்து கீழ்கட்டளை, திருவள்ளுவர் நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் பண்டரிநாதன். இவரது மனைவி பிரேமலதா.இவர் தாம்பரம் மாநகராட்சியில் 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் கோபிநாத்(வயது28) பி.இ. பட்டதாரி.
நேற்று இரவு செல்போனில் நண்பர்களிடம் பேசி விட்டு வருவதாக கூறிவிட்டு கோபிநாத் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் கீழே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பிரேமலதா மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள மின் விசிறியில் மகன் கோபிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு குரோம்பேடடை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கோபிநாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோபிநாத்தின் அறையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை என எழுதி வைத்து உள்ளார்.
கோபிநாத்திற்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கோபிநாத் தற்கொலை செய்து இருப்பது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோபிநாத்தின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






