என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானலில் தொடர் மழைக்கு 3 வீடுகள் இடிந்து தரை மட்டம்- மின் கம்பிகள் அறுந்து விழுந்தது
    X

    கொடைக்கானலில் தொடர் மழைக்கு 3 வீடுகள் இடிந்து தரை மட்டம்- மின் கம்பிகள் அறுந்து விழுந்தது

    • கொடைக்கானலில் கன மழை சமயங்களில் பேரிடர் மீட்புக்குழு வந்து நிவாரண பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
    • மழை மேலும் நீடிக்கும் என்பதால் மழை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களிலும் கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தினசரி வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் மழையில் நனைந்தபடி சென்று வீடு திரும்புவதால் அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொடைக்கானல் மலை கிராமங்களிலும் தொடர் மழையால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று இரவு இடைவிடாது பெய்த கன மழையால் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த வடிவேலு, பாலு, பரமன் ஆகியோரது 3 வீடுகள் இடிந்து தரை மட்டமானது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருந்தபோதும் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மழையில் நனைந்து சேதமானது.

    கொடைக்கானலில் கன மழை சமயங்களில் பேரிடர் மீட்புக்குழு வந்து நிவாரண பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இது வரை அது போன்று யாரும் வரவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணமும், மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதே போல அடுக்கம் கிராமத்தில் பழமையான மரம் முறிந்து விழுந்ததில் அங்கிருந்த மின் கம்பங்களும் அறுந்து ஒரு வீட்டின் மீது சாய்ந்தது. இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் உறவினர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். மழை மேலும் நீடிக்கும் என்பதால் மழை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    Next Story
    ×