search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    54 குவாரிகளிலும் விதிமீறல்கள் கண்டுபிடிப்பு- 13 குவாரிகளை மூட நோட்டீஸ்
    X

    54 குவாரிகளிலும் விதிமீறல்கள் கண்டுபிடிப்பு- 13 குவாரிகளை மூட நோட்டீஸ்

    • ஒரு குவாரி உரிமம் பெற்றும் இன்னும் தொடங்கப்படாததால் அதில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை.
    • 41 கல்குவாரிகளுக்கு சுமார் ரூ.300 கோடி வரை அபராதம் விதித்து கனிமவள துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள 55 குவாரிகளையும் முழுமையாக ஆய்வு செய்து விதிமீறல்களை கண்டறியுமாறு கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கையை கலெக்டரிடம் சமர்பித்தது.

    அதன்படி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 55 கல் குவாரிகளில் 54 கல்குவாரிகளில் விதி மீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒரு குவாரி உரிமம் பெற்றும் இன்னும் தொடங்கப்படாததால் அதில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை.

    இதில் 13 கல்குவாரிகளுக்கு ஏன் கல்குவாரிகளை மூடக்கூடாது என விளக்கம் கேட்டு கலெக்டர் விஷ்ணு தரப்பில் இருந்து குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    மேலும் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக 41 கல்குவாரிகளுக்கு சுமார் ரூ.300 கோடி வரை அபராதம் விதித்து கனிமவள துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அந்த அபராத தொகையை வசூலிக்க அந்தந்த சரக சப்-கலெக்டர்களுக்கு கனிமவளத்துறை பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வந்த அனைத்து குவாரிகளிலும் விதி மீறல்கள் நடந்ததுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் அபராதம் விதிக்கப்பட்ட குவாரிகள் அபராத தொகையை கனிம வளத்துறையில் செலுத்தினால் மீண்டும் குவாரிகள் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்போது விதிமுறைகள் மீறப்பட்ட குவாரிகளில் பெரும்பாலானவை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×