search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை, நீலகிரியில் கடும் குளிர்- பனிமூட்டத்தால் பொதுமக்கள் தவிப்பு
    X

    கோவை, நீலகிரியில் கடும் குளிர்- பனிமூட்டத்தால் பொதுமக்கள் தவிப்பு

    • தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூடுபனியால் இருளாகவே காட்சியளித்தது.
    • கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே வெயில் குறைந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    அத்துடன் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் திரண்டு பகல் நேரமானது இரவு போல காட்சியளிக்கின்றன.

    கடந்த 2 தினங்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது. அடிக்கடி உறைபனி, பனிப்பொழிவு, மேகமூட்டம் என மாறி மாறி வருவதால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.

    நேற்று மதியத்திற்கு பிறகு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மூடு பனி நிலவியது. அத்துடன் சாரல் மழையும் பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

    மூடுபனி நிலவியதால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள சாலைகளில் வரக்கூடிய எந்த வாகனமும் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வந்தனர்.

    தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூடுபனியால் இருளாகவே காட்சியளித்தது.

    மக்களும் அருகில் வந்து, தான் தங்களுக்கு எதிரில் யார் வருகின்றனர் என்பதையே பார்க்க வேண்டி உள்ளது.

    அத்துடன் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனியுடன் உறைபனியும் சேர்த்து கொட்ட தொடங்கியது. வீடுகள் முன்பு வைத்திருந்த பொருட்கள், வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து விழுந்தது. அதனை காலையில் பொதுமக்கள் அகற்றி தங்கள் வேலைகளை தொடங்கினர். தொடர்ந்து மாறி மாறி வரும் சீதோஷ்ண நிலையால் நீலகிரியில் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இன்று காலை 8 மணியை தாண்டியும் குளிர் நிலவி கொண்டிருக்கிறது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சுவர்ட்டர், குல்லா அணிந்தபடியே செல்வதை காணமுடிந்தது.

    குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே மக்கள் தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகிறார்கள். நீலகிரியில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கலாம் என வந்த சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தலங்களை பார்வையிட முடியாமல் விடுதிகள், லாட்ஜூகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே வெயில் குறைந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் குறைந்து, மேகமூட்டமாகவே காணப்பட்டது. இன்று காலை 9 மணியை தாண்டியும் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    அத்துடன் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. வீடுகளில் உள்ள தரைகள் அனைத்தும் ஏ.சியில் இருப்பதை போன்று குளு, குளு என்று காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களிலேயே சுவர்ட்டர், தலையில் குல்லா மற்றும் குளிர் தாங்க கூடிய ஆடைகளை அணிந்து வெளியில் சென்று வருகின்றனர்.

    கடும் குளிர் நிலவுவதால் மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேகமூட்டம் நிலவுவதால், அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்களில் செல்வோர் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.

    Next Story
    ×