search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
    X

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது

    • நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
    • குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான வண்டிச்சோலை, அருவங்காடு, வண்ணாரபேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.

    ஊட்டி:

    தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும்(ரெட் அலர்ட்) என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி நேற்று காலை முதலே நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான முத்தோரை பாலாடா, இத்தலார், நஞ்சநாடு, மணிஹட்டி போன்ற பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    கோடப்பமந்து கால்வாயில் வழக்கத்தை விட அதிகளவிலான நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ரெயில்வே பாலம் அருகே சுமார் 5 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால், படகு இல்லம், காந்தல், தீட்டுக்கல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

    குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான வண்டிச்சோலை, அருவங்காடு, வண்ணாரபேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.

    இன்று காலை மழை சற்று ஓய்ந்திருந்தது. இருப்பினும் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் சாலையோரம் நிற்கும் ஆபத்தான மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோத்தகிரி, கொடநாடு, கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழைக்கு கொடநாடு செல்லும் சாலையோரம் நின்றிருந்த பெரிய ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    கூடலூா், பந்தலூா் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் புன்னம்புழா, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முதுமலை-தெப்பக்காடு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

    கூடலூர் அருகே உள்ள இருவயல், மொலப்பள்ளி பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள ஒடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்பை முழுவதுமாக சூழ்ந்தது. இதனால் அங்கிருந்து 72 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர் மழையையொட்டி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீலகிரியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ் காட்சி முனைகள், நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடியது. சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினா்.

    Next Story
    ×