என் மலர்
தமிழ்நாடு

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே துண்டு துண்டாக மனித எலும்புக்கூடு
- மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து இங்கு வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- கடந்த ஒரு மாதத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடுவாஞ்சேரி:
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே ஏரிக்கரை உள்ளது. அப்பகுயில் உள்ள முட்புதரில் மனித எலும்பு கூடு ஒன்று துண்டு, துண்டாக கிடந்தன.
அந்த எலும்புக்கூட்டில் தலை, கை எலும்புகள் துண்டாக கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற ஒருவர் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எலும்பு கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
எலும்புக்கூடுடன் அந்த நபர் அணிந்து இருந்த கால்சட்டடை, கருப்பு நிற டி-சர்ட் அப்படியே இருந்தது. அருகில் ஷுவும் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். டி-சர்ட்டில் "சேலஞ்ச் 87 கிரியேட்டிவ் டன் இஸ்பெட்டர்" என்று எழுதப்பட்டு இருந்தது.
இறந்த நபர் யார்? ஆணா?பெண்ணா? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் இறந்து பல நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.
மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து இங்கு வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடுகளை போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.