search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எண்ணூரில் 3 மாதமாக பூட்டப்பட்டு கிடந்த கழிப்பறை பயன் பாட்டிற்கு வந்தது
    X

    எண்ணூரில் 3 மாதமாக பூட்டப்பட்டு கிடந்த கழிப்பறை பயன் பாட்டிற்கு வந்தது

    • திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    எண்ணூரில் 150 குடும்பத்தினர் பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடந்த கழிப்பறை மண்டல குழு தலைவர், அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பொதுக்கழிப்பறை கட்டிடம் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

    கழிவறை கட்டிடம் திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பயன்படுத்த முடியாமல் மூடியே கிடந்தன. இதற்கு கழிவறையில் இருந்து செல்லும் குழாயை அருகில் உள்ள கால்வாயில் இணைக்க முடியாததே முக்கிய காரணமாக கூறப்பட்டது. தாழங்குப்பம் அருகே உள்ள நெட்டுக்குப்பம் வழியாக கழிவறை கழிவு நீர் குழாயை கொண்டு சென்று அருகில் உள்ள கால்வாயில் இணைக்கும் சூழல் உள்ளது. ஆனால் இதற்கு நெட்டுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இயற்கையாகவே தாழங்குப்பம் பகுதி உயரமான இடம் ஆகும். இதனால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் நெட்டுக்குப்பம் வழியாக செல்லும்.

    தற்போது கழிவறை பகுதியில் இருந்து குழாயை நெட்டுக்குப்பம் வழியாக கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீட்டை ஒட்டி சுவர்கள் எழுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் கவுன்சி லர்கள் ஜெயராமன், சிவகுமார், தீண்டாமை வன்கொடுமைச் சட்ட அதிகாரிகள், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம், மாநகராட்சி செயற்பொறியாளர் தணிகை வேலன் மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் ஊர் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிலர் குழாய் அமைக்க எதிர்ப்புகள் தெரிவித்தனர். பின்னர் இருதரப்பினர் இடையே சுமுகமாக பேச்சு வார்த்தை நடந்ததை தொடர்ந்து 20 மீட்டர் தூரம் குழாய்கள் அமைப்பதற்கு இருதரப்பினர் சம்மதித்தனர். இதற்கான பணி இன்று காலை செயற்பொறியாளர் தணிகை வேலன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×