search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் ஆற்றில் குதித்து தற்கொலை
    X

    ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் ஆற்றில் குதித்து தற்கொலை

    • கணேசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
    • ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கோவிந்தபாடியை சேர்ந்தவர் கணேசன் (49). இவருக்கு சிவகாமி (45) என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கணேசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் ஓசூரில் இருந்து பஸ் மூலம் மேட்டூர் வந்த கணேசன் சொந்த கிராமத்தில் உறவினர்களை சந்தித்து விட்டு நீர்தேக்க பகுதியான பண்ணவாடி காவிரி ஆற்றுக்கு நேற்று மாலை வந்தார். பின்னர் திடீரென காவிரி ஆற்றில் குதித்து விட்டார். இதனைக் கண்ட மீனவர்கள் உடனடியாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் கணேசனை தேடினர். நள்ளிரவு ஒரு மணி அளவில் கணேசன் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவிரி கரையில் இருந்த கணேசனின் உடைமைகளை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில் கணேசன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அந்த கடிதத்தில், ராஜேஷ் கண்ணா என்பவருக்கு ரூ.8 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டும். கடனை அடைக்க ஓசூரில் உள்ள வீட்டை விற்பனை செய்து விடலாம் என மனைவியிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்தவுடன் நான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வரும் பணத்தை கடன் வாங்கியவர்களிடம் தரவேண்டும். எனது வேலையை என்னுடைய 2-வது மகளுக்கு வழங்க வேண்டும் என எழுதி வைத்திருந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கணேசன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கணேசனின் உறவினர்கள் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்தில் மோகம் கொண்ட கணேசன் வீட்டில் இருந்த தங்க நகைகளை விற்றும், உறவினர்களிடம் பணத்தை கடன் வாங்கியும் விளையாடினார். ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என மனைவி சிவகாமியிடம் யோசனை தெரிவித்தார். இதற்கு மனைவி சம்மதம் தெரிவிக்காததால் கடனை கட்ட முடியாமல் மன உளைச்சலில் காவிரி ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×