search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கட்டிப்புரண்டு சண்டை
    X

    அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கட்டிப்புரண்டு சண்டை

    • மீஞ்சூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இங்கு தலைமை மருத்துவர் மற்றும் 5 உதவி மருத்துவர் என 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது பொன்னேரியை சேர்ந்த டாக்டர் நிரஞ்சன் மற்றும் மீஞ்சூரை அடுத்த மேலூரை சேர்ந்த டாக்டர் டேவிஸ் செந்தில் ஆகிய இருவருக்கும் இடையே பணிக்கு தாமதமாக வருவது குறித்து தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் புரண்டு தாக்கிக் கொண்டனர். இதில் டாக்டர் நிரஞ்சனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    டாக்டர் தாக்கிக்கொண்டதை கண்ட சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த டாக்டர் நிரஞ்ன் ரத்தம் சொட்ட, சொட்ட மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதற்கிடையே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்கள் டாக்டர் டேவிஸ் செந்தில் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதேபோல் டாக்டர் டேவிஸ் செந்திலும் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் டாக்டர்கள் மோதல் தொடர்பாக மாவட்ட துணை இயக்குனர் ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்த உள்ளார். இதன் பின்னர் மோதலில் ஈடுபட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×