search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலீஸ்காரர் தற்கொலை எதிரொலி- கந்துவட்டியை ஒழிக்க டி.ஜி.பி. அதிரடி நடவடிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    போலீஸ்காரர் தற்கொலை எதிரொலி- கந்துவட்டியை ஒழிக்க டி.ஜி.பி. அதிரடி நடவடிக்கை

    • மாநிலம் முழுவதும் கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
    • கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கடலூரை சேர்ந்த போலீஸ்காரர் செல்வகுமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.

    அனிதா என்ற பெண்ணிடம் வாங்கிய ரூ.3 லட்சம் கடனுக்காக அதிக அளவில் செல்வகுமார் வட்டி செலுத்திவிட்ட நிலையிலும் கந்துவட்டி பெண்ணான அனிதா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாலேயே காவலர் செல்வகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கந்துவட்டி வசூலித்த அனிதாவை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அனைத்து போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகள் மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் 2003-ம் ஆண்டு கந்துவட்டி தடை சட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நிலுவையில் உள்ள வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    கந்துவட்டிக்கு விடுபவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி அவர்கள் வைத்திருக்கும் கந்துவட்டி தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற வேண்டும். கையெழுத்து போடப்பட்ட வெற்று பேப்பர்கள், கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் அதுதொடர்பான ஆவணங்கள் இருந்தால் அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

    கந்துவட்டி தொடர்பான இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் கந்து வட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை போலீசார் திறம்பட வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.

    கந்து வட்டி தொடர்பான நடவடிக்கைகளில் சிறப்பாக முன்மாதிரியாக பணியாற்றுபவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் தனித்தனியாக அளிக்கப்படும்.

    இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×