search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்- நீதிபதிகள் எச்சரிக்கை
    X

    சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்- நீதிபதிகள் எச்சரிக்கை

    • உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாட்சியம் அளித்து வந்த நிலையில், சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • ஜாதி, மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்பவரை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தொடக்கத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார். இதனால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்பின் அவர் முன் தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிகிறது.

    சுவாதியை மீண்டும் சாட்சி கூண்டில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது. சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி இன்று காலை சுவாதி நீதிமன்ற வளாகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் காத்திருந்தார். அதனை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் அழைத்து வந்ததில் ஏதேனும் சிரமம் இருந்ததா? என கேட்டனர். அதற்கு சுவாதி உரிய பாதுகாப்புடன் அழைத்து வந்ததாக தெரிவித்தார். கோகுல்ராஜ் உங்களுடன் படித்தாரா? சக மாணவர்களுடன் பேசுவதுபோல் உங்களுடன் பேசுவாரா? என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர் ஆம் என்று தெரிவித்தார்.

    23.6.2015 அன்று நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா? அன்று கோகுல்ராஜை பார்த்தீர்களா? என கேட்கப்பட்டது. ஆனால் சுவாதி அன்று பார்க்கவில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் கோவிலில் பதிவான வீடியோவை காண்பித்து அதில் உள்ள பெண், பின்னால் வரும் ஆண் யாரென கேள்வி எழுப்பினர்.

    ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சுவாதி தெரிவித்தார். பின்னால் வருவது கோகுல்ராஜ் போல் உள்ளது என பதில் தெரிவித்தார். மீண்டும் வீடியோ ஒளிபரப்பபட்டது. அப்போது சுவாதி வீடியோவில் இருப்பதுதான் இல்லை என்று கண்ணீர் மல்க சுவாதி தெரிவித்தார். இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

    தொடர்ந்து நீதிபதிகள் சுவாதியை பார்த்து கூறுகையில், மாஜிஸ்திரேட்டிடம் கூறிய வாக்குமூலத்திலும், தற்போது கூறிய வாக்குமூலத்திலும் வேறுபாடுகள் உள்ளது. வீடியோவில் உங்களை பார்த்து நீங்கள் தெரியவில்லை என கூறுகிறீர்கள். ஜாதியை விட சத்தியம் முக்கியம்.

    நீங்கள் இங்கு புத்தகத்தில் கை வைத்து உண்மை தகவல்களை கூறுவதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால் தற்போது முரணான தகவல்களை கூறி வருகிறீர்கள். மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும் என கோபத்துடன் நீதிபதிகள் கூறினர்.

    இதனை கேட்டவுடன் சாட்சி சொல்லும்போதே சுவாதி கண்ணீர்விட்டு கதறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து 15 நிமிடத்திற்கு பின் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இதற்கிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாட்சியம் அளித்து வந்த நிலையில், சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுவாதி கர்ப்பமாக இருப்பதால் பரிசோதனைக்காக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சத்தியம் என்றைக்கானாலும் சுடும் என பிறழ்சாட்சியான சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, சுவாதி வரும் 30ம் தேதி மீண்டும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினமும் இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×