என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கார் பரிசு விழுந்ததாக கூறி ராமேசுவரம் பெண்ணிடம் ரூ.88 ஆயிரம் மோசடி
- கடந்த 9-ந் தேதி ஒரு செல்போனில் மேரி ஜெனிபர் போனை தொடர்பு கொண்டு நந்தினி என்ற பெண் பேசியுள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமேசுவரத்தை சேர்ந்தவர் மேரி ஜெனிபர் (வயது 35). இவர் குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து அடிக்கடி துணிகளை ஆர்டர் செய்து வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ஒரு செல்போனில் மேரி ஜெனிபர் போனை தொடர்பு கொண்டு நந்தினி என்ற பெண் பேசியுள்ளார். அவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், 7-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கியவர்களுக்கு நடந்த குலுக்கலில் தங்களுக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு பரிவர்த்தனை கட்டணமாக 1 சதவீதம் ரூ.12 ஆயிரத்து 800 செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். மேலும் அவர் ஜெனிபர் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பரிசு விழுந்ததற்கான கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அதில் 1 சதவீதம் ரூ.12 ஆயிரத்து 800 செலுத்த வேண்டும் என்று இருந்ததால், உடனே ஜெனிபர் பேசிய பெண்ணிடம் எனக்கு கார் வேண்டாம் என்றும் அதற்குரிய பணத்தை அனுப்பும் படி கூறி உள்ளார்.
உடனே அந்த பெண், ஜெனிபரின் வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை கேட்டதால் அவர் அனுப்பியுள்ளார். பல்வேறு காரணங்களை கூறி ஜெனிபரிடம் இருந்து 4 தவணைகளில் மொத்தம் ரூ.88 ஆயிரத்து 400 பெற்றுள்ளார் .
இது குறித்து விசாரிக்க ஜெனிபர் பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கிடைக்கவில்லை. அந்த செல்போன் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெனிபர் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






