search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை வ.உ.சி. மைதானத்தில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    கோவை வ.உ.சி. மைதானத்தில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

    • மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • நாங்கள் பல ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இந்த 100 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட தூய்மை பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் இங்கு பணியாற்றி வருகிறார்கள். மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இவர்கள் தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற கோரியும், கலெக்டர் அறிவித்த ரூ.721 ஊதிய உயர்வு சம்பளத்தை வழங்க கோரியும் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து இன்று 400-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தூய்மை பணியார்கள் கோவை-அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி. மைதானத்திற்கு வந்தனர்.

    பின்னர் வாகனங்களை அங்கு நிறுத்தி விட்டு மைதானத்தில் அமர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

    நாங்கள் பல ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களை நிரந்த பணியாளர்களாக மாற்ற பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

    இதுவரை மாநகராட்சி எங்களது போராட்டத்திற்கு செவிசாய்க்கவில்லை.

    மேலும் எங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது என்று தெரிவித்தும் போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்தி ரூ.721 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அந்த சம்பளத்தையும் இதுவரை வழங்கவில்லை.

    எனவே எங்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்த சம்பளமான ரூ.721-யை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களாக உள்ள எங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை எங்களது காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தூய்மை பணியாளர்களின் போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக கோவை மாநகரில் பல இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

    Next Story
    ×