search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குழந்தைகளின் செயல்பாட்டை முடக்கும் செல்போன்- கோடை விடுமுறை காலத்தில் கவனத்தை திசை திருப்ப போராடும் பெற்றோர்
    X

    குழந்தைகளின் செயல்பாட்டை முடக்கும் செல்போன்- கோடை விடுமுறை காலத்தில் கவனத்தை திசை திருப்ப போராடும் பெற்றோர்

    • ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.
    • குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள்.

    இருபத்தைந்து வயதானாலும் பலர் மொபைல் போனில் புது புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது.

    அதேநேரம் பல் முளைக்காத சின்னஞ்சிறுசுகள் செல்போன் கேட்டு அடம் பிடிப்பதையும் செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகி விடுவதையும் வீடுகள் தோறும் காண முடிகிறது. செல்லுக்கு கட்டுப்படும் குழந்தைகள் தாயின் சொல்லுக்குகூட கட்டுப்படுவது இல்லை. அந்த குழந்தைகளே செல்போனை திறந்து தேவையான கார்ட்டூன் போன்ற படங்களை பார்த்தும் ரசிக்கிறது.

    அதை பார்த்ததும் 'ஆஹா... என் பிள்ளையின் ஆற்றலைப் பார்...! என்று பெருமைப்படும் பெற்றோரும் உண்டு. என் குழந்தைகள் எப்போதும் செல்போனில்தான் விளையாடும். அவனுக்கு செல்போனை கையில் கொடுத்தால் போதும் இரவில் கூட பக்கத்தில் வைத்து கொண்டுதான் தூங்குவான். 'என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் திறந்து பார்த்து விடும். செல்போனை கையில் கொடுத்தால்தான் சாப்பிடும்..." இது தங்கள் குழந்தைகளை பற்றி தாய்மார்கள் பெருமையுடன் சொல்லும் சேதி!

    ஆனால் தனது குழந்தை செல்போன் என்ற ஆக்டோபசால் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கப்படுகிறது என்பதை அப்போது உணர்வதில்லை.

    ஒரு கட்டத்தில் செல்போன் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படாத பாடுபடுகிறார்கள்.

    நவீன உலகில் செல்போன் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அது தரும் நன்மையை விட தீமை அதிகரித்து விடுகிறது.

    உலகம் முழுவதும் செல்போன் விற்பனை செய்யும் உலக கோடீசுவரரான டிம் குக் தனது குழந்தைக்கு விளையாட செல்போன்கள் கொடுப்பதில்லை என்பதை நம்ப முடிவதில்லை.

    ஆனால் குழந்தையின் ஆரோக்கியம் கருதி செல்போன் கொடுப்பது கிடையாது என்பதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா பெருந்தொற்று காலகட்டம்தான் பலரையும் கட்டாயமாக செல்போனுக்குள் மூழ்க வைத்தது.

    ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் செல்போன்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. எனவேதான் தேவைக்கான என்ற நிலை மாறி செல்போன்களிலேயே மூழ்க வைத்து விட்டது.

    குழந்தைகள் செல்போன்களின் ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்த்து கொண்டிருந்தால் அவர்களுக்கு பல், கண் பிரச்சினைகள், பார்வைத்திறன் குறைபாடுகள் ஏற்படலாம்.

    பேச்சு திறன் குறையும். மற்றவர்களோடு பேசும் திறன் குறையும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து பழகவோ, விளையாடவோ முடியாமல் தனிமைப்பட்டு விடுகின்றன.

    குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பில் சுமார் 60 சதவீத குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்களாம். அதிலும் 31 சதவீதம் பேர் 2 வயதுக்கு முன்பே பயன்படுத்த தொடங்கி விடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    குழந்தை பருவம் என்பது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மூளை செல்களை வலுப்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய கட்டமாகும். ஆனால் ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் எந்நேரமும் அல்லது அதிக நேரம் போன்களில் மூழ்கி இருக்கும் போது, அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியரின் அறிவுறுத்தல்களை தவிர்க்கிறார்கள்.

    தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு செய்ய கூடியது. அதிலும் குறிப்பாக Blue light radiation-க்கு தொடர்ந்து கண்களை வெளிப்படுத்துவது, ஒருவரது விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை பாதிக்கிறது. தவிர குறுகிய கால நினைவாற்றலில் (short-term memory) குறுக்கிடுகிறது.

    இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியேறும் புளூ ரேடியேஷன்ஸ், இது இரவல்ல பகல் என்று மூளையை நம்ப வைக்கிறது. இதனால் உடல் தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை நிறுத்துகிறது. எனவே அடுத்த நாள் தூக்கமின்றி களைப்பாகவும் எந்த வேலையையும் முழு திறனில் செய்ய முடியாமலும் ஒருவர் பாதிக்கப்படுவார்

    செல்போனில் மூழ்குவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்துள்ளதால் பள்ளிகளுக்கு ஓரிரு நாள் விடுமுறை கிடைத்தாலே ஏன்தான் விடுமுறை விட்டார்களோ என்று நினைக்கிறார்கள்.

    இந்த நிலையில் கோடை விடுமுறை வர உள்ளது. இதில் 85 சதவீத குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடப்பார்களே என்று பெற்றோர்கள் கவலையில் மூழ்கி இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

    அமேசான் நிறுவனம் நாடு முழுவதும் 10 மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 2 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் 750 பெற்றோரிடம் ஆய்வை நடத்தி உள்ளது.

    செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களில் மூழ்கும் போது குழந்தைகளிடம் சுறுசுறுப்பான உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதாக 90 சதவீதம் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    2 மணி நேரம் வரை செல்போன்களை பயன்படுத்தலாம் என்று கூறும் நிலையில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    96 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு அழைத்து செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    82 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகள் கவனத்தை திசை திருப்பி வேறு எந்தவிதமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

    இதில், குழந்தைகள் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 50 சதவீத பெற்றோரும், நல்லொழுக்கம் மற்றும் சமூக பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டுமென 45 சதவீத பெற்றோரும், நடனம், பாட்டு, இசைப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 36 சதவீத பெற்றோரும், கலை மற்றும் கைவினை பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும் விருப்பம் கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்தது' என்றார்.

    Next Story
    ×