என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பவானியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது- பொதுமக்கள் முகாம்களில் தங்க வைப்பு
- கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பவானி:
கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அங்க வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன்பட்டறை மற்றும் பசுவேஸ்வரர் வீதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கந்தன் பட்டறை பகுதியில் வசித்த 28 குடும்பத்தினர், பசுவேஸ்வரர் வீதியில் உள்ள 20 குடும்பத்தினரை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைத்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.
பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.
காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணிதுவைக்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






