என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி: உரிமையாளர்-போர்மேன் மீது வழக்கு
    X

    பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி: உரிமையாளர்-போர்மேன் மீது வழக்கு

    • பட்டாசு ஆலையில் 60 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்தது வந்தது.
    • விபத்தில் சம்பவ நடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமானது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணைைய சேர்ந்தவர் கேசவன் (வயது 50). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கங்கரக்கோட்டை ஊராட்சி மார்க்கநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்றது.

    இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப் படுகின்றன. இந்த பட்டாசு ஆலையில் 60 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்தது வந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

    அந்த அறையில் வேலை பார்த்து கொண்டிருந்த மார்க்கநாதபுரத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மனைவி ஜெயசித்ரா (24) விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த விபத்தில் சம்பவ நடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமானது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கங்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இதில் பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த 31.3.2023 அன்று முடிவடைந்து விட்டதாகவும், இந்த விபத்துக்கு உரிமையாளர் கேசவன், போர்மேன் முனியசாமி ஆகியோர் உரிய பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதுதான் காரணம் என்று தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் மீது ஏழாயிரம் பண்ணை போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஆலை உரிமையாளர் கேசவன், போர்மேன் முனியசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×