search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மைய சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து
    X

    ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மைய சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து

    • மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை சார்பில் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் 9 முறை கருமுட்டை எடுத்ததாகவும் இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    சென்னை:

    ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக ஈரோடு, சேலத்தில் உள்ள சுதா ஆஸ்பத்திரி, பெருந்துறை, ஓசூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 4 ஆஸ்பத்திரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    மேலும் இந்த ஆஸ்பத்திரிகளில் செயல்படும் ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கவும், ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர். மேலும் பெருந்துறையில் உள்ள மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சுதா ஆஸ்பத்திரி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட்டும், மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை சார்பில் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் 9 முறை கருமுட்டை எடுத்ததாகவும் இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    Next Story
    ×