என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழி முட்டை கொண்டு வர தடை
- ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன.
- மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.
ஊட்டி:
கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன.
வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வருகின்றனர்.
இங்கு பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.
இதையடுத்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கக்கனல்லா, நம்பியார் குன்னு, தானூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய 8 சோதனை சாவடிகளில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழு போலீசார், வனத்துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளதால், அங்கிருந்து இறைச்சியையோ, முட்டைகளையோ தமிழகத்துக்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
தற்காலிகமாக கேரள மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் பறவைகள் தொடர்புடைய பொருட்களை மறு உத்தரவு வரும் வரை கொண்டு வர தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.






