search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நள்ளிரவில் வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் மக்கள் பீதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நள்ளிரவில் வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் மக்கள் பீதி

    • ஆடுகளின் ரத்தமா அல்லது மனித ரத்தமா என சோதனை செய்து வருகின்றனர்.
    • நள்ளிரவில் அந்த பகுதியில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் கடும் பீதியில் உள்ளனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட உச்சி சுவாமி கோவில் நான்காவது குறுக்கு தெரு அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் லேசானது முதல் பலத்த மழை பெய்து வந்தது. நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வழக்கம்போல் இரவு தூங்கினர்.

    இன்று அதிகாலை பெண்கள் எழுந்து வாசல் தெளிக்க வந்தபோது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியில் உறையச் செய்தது. காரணம் பெரும்பாலான வீட்டின் வாசல்கள் மற்றும் வீட்டு சுவர்களில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது. பீதியடைந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே ஒருவருக்கொருவர் தகவல் கொடுத்து திரண்டனர்.

    மேலும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவின் முன்பகுதியிலும் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பூங்கோதை என்ற மூதாட்டி கூறுகையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னால் எங்கள் தெருவின் பின்பகுதியில் இதேபோல் ஒரு வீட்டில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு 1 மணி வரை நான் தூக்கம் வராமல் விழித்திருந்தேன் அதுவரை யாருடைய நடமாட்டமும் இல்லை. அதன் பிறகு இன்று அதிகாலை வழக்கம் போல் வாசல் தெளிப்பதற்காக எழுந்து பார்த்த போது என் வீடு உள்பட சுமார் பத்து வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் எனது வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் முன்பகுதியிலும் ரத்தம் தெளிக்கப்பட்டுள்ளது. இதனை யார் செய்திருப்பார்கள், எதற்காக செய்தார்கள் என்று தெரியவில்லை என பதட்டத்துடன் தெரிவித்தார்.

    ரத்தம் தெளிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆங்கிலத்தில் பி.ஆர். நேற்று இரவு என்று எழுதியிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரத்தம் தெளிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர்.

    மேலும் அந்த ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இது ஆடுகளின் ரத்தமா அல்லது மனித ரத்தமா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் மாந்திரீக வேலைக்காக யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நள்ளிரவில் அந்த பகுதியில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் கடும் பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×