என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தடையை மீறி கர்நாடகா மேகதாது அணையை கட்ட முயற்சி- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
- தமிழ்நாட்டின் ஒப்புதலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியும் இல்லாமல் அந்த அணையை கர்நாடக அரசால் கட்ட இயலாது.
- மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிப்பதற்கு தடை விதித்தது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் நிலம் கணக்கெடுப்புப் பணிகளை மேற் கொள்வதற்காக 29 வன அதிகாரிகளை கர்நாடக அரசு அமர்த்தியிருக்கிறது. மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு கூட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை மீறி மேகதாது அணை கட்டுவதற்கான பணிகளை கர்நாடகம் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் ஒப்புதலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியும் இல்லாமல் அந்த அணையை கர்நாடக அரசால் கட்ட இயலாது.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாத நிலையில், காவிரி ஆணையத்தின் அனுமதியைப் பெற்று அணையை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகத்தை ஆட்சி செய்த முந்தைய பா.ஜ.க. அரசு முயன்றது. அதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிப்பதற்கு தடை விதித்தது.
மேகதாது அணை குறித்து விவாதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், அணை தொடர்பான எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது. அதையும் மீறி ஏதேனும் பணிகளை மேற்கொண்டால் அது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இந்த உண்மைகளை அறிந்தும் கூட மேகதாது அணை கட்டுவதற்கான வனத்துறை நிலங்களை கணக்கெடுக்கும் பணிகளை செய்வதற்காக 29 அதிகாரிகளை அமர்த்துவது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், கூட்டாட்சித் தத்துவத்தையும், அண்டை மாநில உறவுகளின் மாண்புகளையும் அவமதிக்கும் செயலாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், உச்சநீதிமன்றம் ஆகிய எதன் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, மேகதாது அணை கட்டுவது மட்டும் தான் எங்களின் ஒற்றை நோக்கம் என்பதை இதன்மூலம் கர்நாடக அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது. இதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கர்நாடக அரசின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்துக்கும் காரணம், மேகதாது விவகாரத்தின் தொடக்கத்தில் மத்திய அரசு செய்த தவறுகள் தான். 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தான் முதல் தவறு ஆகும்.
இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் சட்டவிரோதமானவை.
வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
எனவே, மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். அதே போல், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






