search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடமாநில தொழிலாளர்களை தீ வைத்து கொல்ல முயற்சி- 14 தற்காலிக செக் போஸ்ட் அமைத்து போலீசார் கண்காணிப்பு
    X

    வடமாநில தொழிலாளர்களை தீ வைத்து கொல்ல முயற்சி- 14 தற்காலிக செக் போஸ்ட் அமைத்து போலீசார் கண்காணிப்பு

    • 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடியிருப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்மநபர்கள் தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் கரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 14 வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக 14 தற்காலிக போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இரவு நேரங்களில் சோதனை சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரணை நடத்தி அவர்களுடைய முகவரிகளை கேட்டு எழுதப்பட்ட பின்னரே அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம், முதற்கட்டமாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே நேற்று மேலும் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரியில் இருந்து 600 போலீசார் வரவழைக்கபட்டு, மொத்தம் 750 போலீசார் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் கரும்பு ஆலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் உள்ளிட்டோர் வெல்ல ஆலைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறியதாவது:- ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் 20 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக சோதனை சாவடிகள் மற்றும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேற்கு மண்டலத்தில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் கள்ளசாராயம் விற்பனை ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×