என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆவடியில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை
    X

    ஆவடியில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை

    • சிறுமி டானியாவுக்கு இன்று காலை அறுவை சிகிச்சை தொடங்கியது. இந்த சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
    • அறுவை சிகிச்சையில் 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த மோரை, வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களது 9 வயது மகள் டானியா. 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயது வரை இயல்பாக வளர்ந்தார். இந்த நிலையில் 3½ வயதுக்கு பின்னர் டானியாவின் முகத்தில் தோன்றிய சிறிய கட்டி அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.

    பல்வேறு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் சிறுமி டானியாவுக்கு அரியவகை முகச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல டானியாவின் ஒரு பக்க முகம், முழுவதும் சிதையத் தொடங்கியது.

    இதனால் பள்ளியிலும் டானியாவிடம் மற்ற சிறுமிகள் பாகுபாடு காட்டியதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும் டானியாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான பண வசதி இல்லை. அவருக்கு அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டானியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த சில நாட்களாக டானியாவுக்கு பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இன்று காலை 8 மணிக்கு சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. இந்த சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதில் 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முன்னதாக அறுவை சிகிச்சைக்கு செல்லும் சிறுமி டானியாவை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சந்தித்து நம்பிக்கையூட்டி பேசினார். அவருக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

    அப்போது மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், மோரை ஊராட்சி தலைவர் திவாகர், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் துரை வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்று தெரிகிறது. இதன் பின்னர் சிறுமியின் முகம் பழைய நிலைக்கு திரும்பும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து சிறுமி டானியாவின் தந்தை ஸ்டீபன் ராஜ் கூறியதாவது:-

    எனது குழந்தையின் இந்த நோய் பாதிப்பால் நான் பல்வேறு கஷ்டங்களை அடைந்தேன். ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவு செய்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. தற்போது என் குழந்தைக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை இன்று நடைபெறுகிறது.

    இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த முகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    அறுவை சிகிச்சை முடித்து ஒரு வாரத்துக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து டானியா வீடு திரும்ப இருக்கிறாள்.

    இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    Next Story
    ×