search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மொட்டு காளான் சாப்பிட்ட குழந்தை உட்பட 3 பேருக்கு வாந்தி-மயக்கம்
    X

    மொட்டு காளான் சாப்பிட்ட குழந்தை உட்பட 3 பேருக்கு வாந்தி-மயக்கம்

    • குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பரவலாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே காளான் முளைத்துள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தத்தப்பள்ளி அருகே கலைஞர் நகரில் வசித்து வருபவர் குணசேகரன் (38). இவரது மனைவி பிருந்தா (35). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து கொண்டு குணசேகரன், பிருந்தா வீட்டுக்கு கிளம்பி வந்தனர். அப்போது பிருந்தா தோட்டத்தில் விளைந்திருந்த மொட்டு காளானை பறித்து வீட்டுக்கு எடுத்து சென்றார்.

    பின்னர் சமைத்து கணவன்-மனைவி சாப்பிட்டனர். அதன்பிறகு குழந்தைக்கும் அதனை கொடுத்துள்ளனர். காளானை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் 3 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சாப்பிட்டது விஷம் தன்மை கொண்ட காளான் என தெரிய வந்தது. கணவன், மனைவி ஓரளவு தேறி வந்த நிலையில் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுகிறது.

    தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே காளான் முளைத்துள்ளது. இதனை ஒரு சிலர் சமைப்பதற்கு எடுத்து சென்று சாப்பிட்டு விடுகின்றனர். அவ்வாறு செய்தால் உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×