search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவாரூர் திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் கைது
    X

    திருவாரூர் திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் கைது

    • திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த மாதவன் மகன் திவாகரன்.
    • தேர்வு மேற்பார்வையாளர் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள கிடாரம் கொண்டான் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று பி.ஏ பொலிடிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு நடைபெற்றது.

    தேர்வறையில் இருந்த பேராசிரியர் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பரிசோதிக்கும் போது பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுத வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது பாஸ்கர் என கூறியவருக்கும், அதில் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருந்துள்ளது. அடையாள அட்டையில் ஒட்டப்பட்டிருந்த படம், திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் ஆவார்.

    இதனையடுத்து உடனடியாக அந்த வாலிபரை தனி அறையில் அமர வைத்து தேர்வு மேற்பார்வையாளர், பேராசிரியர்கள் தீவிர விசாரித்தனர்.

    அதில் அந்த நபர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த மாதவன் மகன் திவாகரன் (வயது 29) என்பதும் பிளஸ்-2 முடித்துவிட்டு 2 ஆண்டு உடற்கல்வி ஆசிரியர் படிப்பை படித்துள்ளதும், தற்போது தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், தான் யாருக்கு தேர்வு எழுதுகிறோம் என்பது தெரியாது என்றும், தன்னை திருவாரூர் புலிவலம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பா.ஜ.க கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் என்பவர் தேர்வு எழுத அனுப்பி வைத்ததாகவும் திவாகரன் தெரிவித்தார்.

    இது குறித்து தேர்வு மேற்பார்வையாளர் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட திவாகரன், மாவட்ட பா.ஜ.க கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் தேர்வில் ஆள்மாறாட்டம் வழக்கில் சம்பந்தப்பட்ட மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து இந்த சம்பவத்தில் வேறுயாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×