search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்: விடுதிக்கு சீல் வைப்பு
    X

    அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்: விடுதிக்கு 'சீல்' வைப்பு

    • 3 பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ-மாணவிகள் பங்கேற்ற தூய்மை முகாம் கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று காலை நடந்தது.
    • லைசன்ஸ் இல்லாமல் உணவு விடுதி நடத்தியது தெரிய வந்ததால் அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அரசுமேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல் நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ-மாணவிகள் பங்கேற்ற தூய்மை முகாம் கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று காலை நடந்தது.

    முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு பொட்டலமாக வழங்கப்பட்டது. அதனை தூய்மை பணி முடிந்ததும் கொட்டாரம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளியில் வைத்து சாப்பிட்டனர்.

    இதில் 43 மாணவ-மாணவிகளுக்கு திடீர் என்று வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாணவ-மாணவிகள் சிகிச்சைக்காக கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆயிஷா தலைமையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இதில் 13 மாணவ-மாணவிகள் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கலெக்டர் அரவிந்த், விஜய் வசந்த் எம்பி., எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.காந்தி, மேயர் மகேஷ், மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர் அய்யப்பன் மற்றும் பலர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளை பார்த்தனர். அவர்களது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

    இன்று காலை அமைச்சர் மனோ தங்க ராஜ், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர், சிகிச்சையில் உள்ள மாணவ-மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினார். அவருடன் மேயர் மகேஷ் மற்றும் பலர் சென்றிருந்தனர்.

    இந்த நிலையில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொட்டாரம் அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரணை நடத்தினர். மாணவர்களுக்கு உணவு பொட்டலம் தயாரித்து வழங்கிய கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் லைசன்ஸ் இல்லாமல் உணவு விடுதி நடத்தியது தெரிய வந்ததால் அதிகாரிகள் "சீல்" வைத்தனர்.

    மாணவ-மாணவிகள் சாப்பிட்ட இட்லி, வடை, சாம்பார், சட்னி, மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரி கள் கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில உள்ள நுண்ணறிவு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தவிர கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் குடிப்பதற்காகபயன்படுத்தி வந்த தண்ணீரையும் கைப்பற்றி பரிசோதனைக் காக அனுப்பி வைத்து உள்ளனர்.

    மேலும் அந்த தனியார் உணவு விடுதியில் இருந்த 6 சமையல் எரிவாயு கலன்களையும் வருவாய் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

    Next Story
    ×