search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூரில் சித்தா கிளினிக் பூட்டி சீல்: சிகிச்சை குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட போலி டாக்டர் சிக்கினார்

    • முரளிக்குமார், மருந்துகளை எங்கிருந்து, யார் மூலம் வாங்குகிறார் என்பதற்கான முழு விவரங்கள் இல்லை.
    • முரளிக்குமார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுக்கப்படும் என்று மருத்துவ துறையினர் கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி ரோடு, ஆஷர் நகர் அருகே, 'கற்பக விருக்ஷம் நலவாழ்வு மையம்' செயல்பட்டு வருகிறது. அதில், முரளிக்குமார் என்பவர், மனநியல் பேராசிரியர், இ-மருத்துவர் என குறிப்பிட்டு இடுப்பு, கழுத்து, கைகால், முதுகு வலி பிரச்னைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

    இவர் தனது கிளினிக்கில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தார். இவரது நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டருக்கு புகார் வந்ததால், விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனால், மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண்பாபு, நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் தலைமையிலான டாக்டர் குழுவினர் கிளினிக் சென்று, முரளிக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் அவரது கிளினிக்கில் சென்று சோதனை செய்தனர். அப்போது அதிகாரிகள் வருவதை அறிந்ததும் ஊழியர்கள் மூலம் அங்கிருந்த மருந்துகளை மொட்டை மாடியில் பதுக்கி வைத்திருந்தார். அதனை கண்டுபிடித்த அதிகாரிகள் மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    இந்த ஆய்வு குறித்து, மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், ''முரளிக்குமார், மருந்துகளை எங்கிருந்து, யார் மூலம் வாங்குகிறார் என்பதற்கான முழு விவரங்கள் இல்லை. விசாரணையில் சான்றிதழ் அனைத்தும் போலி என்பது தெரிய வந்துள்ளது. எனவே, கிளினிக் பூட்டி, 'சீல்' வைத்தோம். கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என்றனர்.

    முரளிக்குமார் தான் வழங்கும் மருந்துகள், மருத்துவ முறைகள் குறித்து, 'யூ டியூப்' வீடியோக்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் போலி மருத்துவர் என தெரிய வந்துள்ளதால், அவர் குறித்த வீடியோ வாக்குமூலத்தை மருத்துவக்குழுவினர் பதிவு செய்தனர். அந்த வீடியோவில், ''விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன். யூ டியூப்பில் அப்லோடு செய்த வீடியோக்களை திரும்ப பெறுகிறேன்,'' என தெரிவித்துள்ளார். மருத்துவ துறையினர் கூறுகையில், 'முரளிக்குமார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுக்கப்படும்' என்றனர்.

    Next Story
    ×