search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புளியந்தோப்பில் கழிவுநீர் குழாய் உடைந்து வெள்ளமாக ஓடிய சாக்கடை நீர்: போக்குவரத்து பாதிப்பு
    X

    புளியந்தோப்பில் கழிவுநீர் குழாய் உடைந்து வெள்ளமாக ஓடிய சாக்கடை நீர்: போக்குவரத்து பாதிப்பு

    • கழிவுநீர் சாலையில் வெளியேறியதால் பட்டாளம், புளியந்தோப்பு முழுவதும் சாக்கடை வெள்ளமாக காட்சி அளித்தது.
    • பட்டாளம் சந்திப்பில் இருந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்புவதற்கு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் கழிவுநீர் அகற்றும் நிலையம் செயல்படுகிறது.

    இந்த பம்பிங் நிலையத்தில் உள்ள 600 மீட்டர் நீளமுள்ள பிரதான குழாய் நேற்று இரவு 8 மணியளவில் உடைந்தது. கழிவுநீர் செல்லக்கூடிய குழாய் உடைந்ததால் அதில் இருந்து சாக்கடை நீர் வெள்ளம் போல் சாலையில் ஓடியது. பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஓடிய சாக்கடை வெள்ளம் அருகில் உள்ள கே.எம்.கார்டன் பகுதியில் புகுந்தது.

    தகவல் அறிந்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து கழிவுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினர். இதனால் கழிவுநீர் வெளியேறுவது சற்று குறைந்தது. ஆனாலும் புளியந்தோப்பு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தெருக்களில் கழிவுநீர் வெள்ளம் போல சூழ்ந்து நின்றது.

    இரவு முழுவதும் வீடுகளை சூழ்ந்து நின்றதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கழிவுநீர் வாகனத்தை தெருக்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இரவே அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். வாகனங்களை கொண்டு வந்து கழிவுநீரை உறிஞ்சி எடுக்க முயற்சித்தனர். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. மழைநீர் தேங்கி நிற்பதுபோல கழிவு நீர் வீடுகளை சுற்றி தேங்கி நின்றதால் துர்நாற்றம் வீசியது.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு கழிவுநீர் மீண்டும் வேகமாக அந்த குழாயில் இருந்து வெளியேறியது. 'குபுகுபு'வென வெளியேறிய கழிவுநீர் தெருக்களில் பாய்ந்தது. இதனால் வீடுகளில் இருந்து அப்பகுதி மக்கள் வெளியே வர முடியவில்லை. வீட்டிற்கு உள்ளேயும் செல்ல முடியவில்லை.

    கழிவுநீர் நிலையத்தில் இருந்து கழிவுநீர் சாலையில் வெளியேறியதால் பட்டாளம், புளியந்தோப்பு முழுவதும் சாக்கடை வெள்ளமாக காட்சி அளித்தது. இதனால் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காலை 7.30 மணியில் இருந்து பஸ், ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அந்த சாலையில் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பட்டாளம் சந்திப்பில் இருந்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. புரசைவாக்கம், டவுட்டனில் இருந்து பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டன. இரு சக்கர வாகன ஓட்டிகள் தெருக்களில் உட்பகுதி வழியாக புகுந்து சென்றனர்.

    இதற்கிடையில் அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி தெருக்களில் தேங்கி நின்ற கழிவுநீரை உறிஞ்சி எடுத்தனர்.

    இதனால் வீடுகளை சூழ்ந்த கழிவுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டது. அதன்பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனாலும் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் குளம்போல தேங்கிய கழிவு நீரை ஊழியர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×