என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் வசூலித்த வடமாநில கடன் செயலி கும்பல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் வசூலித்த வடமாநில கடன் செயலி கும்பல்

    • கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவிதாவின் செல்போனுக்கு ஒரு கடன் செயலி நிறுவனத்தில் இருந்து லிங்க் வந்தது.
    • கவிதா அந்த கடன் செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கடன் பெற்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30) பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருப்பூரில் உள்ள ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவிதாவின் செல்போனுக்கு ஒரு கடன் செயலி நிறுவனத்தில் இருந்து லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்து பார்த்தபோது , குறைந்த வட்டியில் ரூ.5ஆயிரம் கடன் வாங்கி கொள்ளலாம் என்ற தகவல் இருந்தது. இதையடுத்து கவிதா அந்த கடன் செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கடன் பெற்றார். இதற்காக அவரது புகைப்படம், ஆதார் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை கடன் செயலியில் பதிவேற்றினார்.

    இதைத்தொடர்ந்து மாதந்தோறும் ரூ.5ஆயிரத்திற்கான தவணை தொகையை செலுத்தி வந்தார். 8 மாதங்களில் அசல், வட்டியுடன் பணத்தை முழுவதுமாக செலுத்தி முடித்தார்.

    இந்தநிலையில் கடன் செயலியை சேர்ந்த கும்பல் கவிதாவின் செல்போனுக்கு ஒரு லிங்கை அனுப்பினர். அதனை கவிதா பார்த்தபோது அவரது ஆபாச புகைப்படங்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடன் செயலியை சேர்ந்த கும்பலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியது உள்ளது. அதனை செலுத்துங்கள். இல்லையென்றால் உங்களது ஆபாச புகைப்படங்களை இணையதளம் மற்றும் உறவினர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த கவிதா, கடன் செயலி மோசடி கும்பல் கேட்கும் பணத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். 8 மாதங்களாக மிரட்டி கவிதாவிடம் இருந்து ரூ.26 லட்சம் வரை பறித்துள்ளனர். பணம் இல்லாதபட்சத்தில் கவிதா வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணம் செலுத்தி வந்துள்ளார்.

    தொடர்ந்து மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பணம் இல்லாததால் இதுபற்றி தனது கணவர் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார்.

    உடனே இதுகுறித்து அவர் திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கவிதாவிடம் பணம் கேட்டு மிரட்டிய கடன் செயலி மோசடி கும்பல் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். மேலும் கவிதா, மோசடி கும்பலுக்கு செலுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கணக்குகள் குஜராத், மேற்கு வங்காளம், அசாம், புதுடெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்குகள் என தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர். மேலும் இந்த மோசடி செயலில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி திருப்பூர் பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடன் செயலி மூலம் கடன் பெறும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் கடன் செயலி மூலம் பணம் பெற்று மோசடி கும்பல் வலையில் சிக்கி விடுகின்றனர். எனவே கடன் செயலி மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×