search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை நெடுஞ்சாலையில் பறந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள்- பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்ததால் பரபரப்பு
    X

    வேலூர் கொணவட்டம் சாலையோரம் சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் சேகரித்த காட்சி.

    சென்னை நெடுஞ்சாலையில் பறந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள்- பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்ததால் பரபரப்பு

    • வேலூர் வடக்கு போலீசார் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர்.
    • கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகே இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்று விட்டனர்.

    காற்றில் பிரிந்த ரூபாய் நோட்டுகள் சாலையில் பறந்தன. இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். அதில் ஒருவர் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் வடக்கு போலீசார் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். மேலும் பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கினர். அதனை போலீஸ் நிலையம் கொண்டு வந்து எண்ணிய போது ரூ.14.50 லட்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தது.

    ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.

    கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இன்று காலையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் சிலர் எடுத்து சென்றனர். அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வியாபாரிகள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா அருகே காரிலிருந்து லாரிக்கு பணத்தை மாற்றியபோது போலீசாரிடம் ரூ.14.70 கோடி சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் கள்ள நோட்டுகளை வீசி சென்ற சம்பவம் வேலூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×