search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் பூத்து குலுங்கும் அரிய வகை ஓடை குறிஞ்சி மலர்கள்

    • ஓடை குறிஞ்சி மலர்களிலேயே தற்போது பூத்துள்ள மலர்கள் மணி வடிவத்தில் உள்ளது.
    • அரிய வகை ஓடை குறிஞ்சி மலர்கள் அருகில் சென்று புகைப்படங்களும் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விண்ணை முட்டும் மரங்களும் பசுமை போர்த்திய புல்வெளிகளும் தனிச்சிறப்பாக இருந்தாலும் இந்த நகருக்கு பல்வேறு அடையாளங்களும் உள்ளன.

    அரிய வகை தாவரங்களில் தொடங்கி மலைத்தேன், குறிஞ்சி மலர் வரை அடங்கும். மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குறிஞ்சி மலர்களில் ஒருவகையான ஓடைக்குறிஞ்சி தற்போது கொடைக்கானலில் பூக்க தொடங்கி உள்ளது. குறிஞ்சி மலர்கள் குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகை செடிகள் காணக் கிடைக்கின்றன.

    இதில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 30 வகைகளுக்கும் மேலான குறிஞ்சி மலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நீல நிறத்தில் பூக்கும் இதுபோன்ற குறிஞ்சி மலர்கள் மலைகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. குறிஞ்சி பூவிலேயே ஏராளமான வகைகள் உண்டு. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர் நீலக்குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது. தற்போது பூத்துள்ள இந்த ஓடை குறிஞ்சிகள் வருடம்தோறும் பூக்கும் மலர் என்றும் கூறப்படுகிறது.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கொடைக்கானலில் பூத்தது. அதன் பிறகு 2030ல் இந்த நீல குறிஞ்சி மலர்கள் பூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தற்போது நீரோடைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் குறிஞ்சி மலர்களில் ஒருவகையாக உள்ள ஓடை குறிஞ்சிகள் பூக்க தொடங்கி இருக்கிறது. மேலும் ஓடை குறிஞ்சி மலர்களிலேயே தற்போது பூத்துள்ள மலர்கள் மணி வடிவத்தில் உள்ளது. அதுவும் மிகச்சிறிய பூக்களாக உள்ளதால் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

    நீரோடைகளில் தற்போது பூத்துள்ள ஓடை குறிஞ்சிகள் ஓடை குறிஞ்சிகளா அல்லது ஓடைக்குறிஞ்சிகளிலேயே வேறு ஏதும் வகைகளா? என தோட்டக்கலை துறையினர் ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியவகை ஓடை குறிஞ்சி மலர்கள் அருகில் சென்று புகைப்படங்களும் எடுத்து செல்கின்றனர்.

    Next Story
    ×