search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசை, கனவு, லட்சியம் கானல் நீரானது- கால் துண்டிக்கப்பட்டதால் கதறும் கால்பந்து வீராங்கனை பிரியா

    • பள்ளியில் படிக்கும்போதே பிரியாவுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது
    • ஆபரேசன் என்றதும் தயங்கி பிரியாவை வேறு சில மருத்துவர்களிடம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    ஒரு இளம் கல்லூரி மாணவியின் கனவு, ஆசை, லட்சியம்... எல்லாம் உருவானதுமே உருத்தெரியாமல் போய் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    பிரியா!

    பதினேழு வயதான பிரியா சென்னை ராணிமேரி கல்லூரி மாணவி. கால்பந்தாடி எதிரிகளை மைதானத்தில் பந்தாடுவார்! அவரது லாவகமான நகர்த்தல் ரசிகர்களை ஈர்க்கும். விளையாட்டு உடையில் கல்லூரி மைதானத்தில் அவர் பயிற்சி பெறும்போது காலுக்குள் சிக்கிய பந்தை நாலா புறமும் கால்களை சுழற்றி அடித்து விரட்டினாலும் தன் கால் எல்லைக்குள் கட்டுப்படுத்தி அவர் ஆடும் ஆட்டத்தை சக கல்லூரி மாணவிகள் ஆச்சரியமாக பார்ப்பார்கள்.

    ஆனால் இன்று காலே இல்லாமல் ஆஸ்பத்திரி படுக்கையில் இருப்பதை பார்த்து அத்தனை பேரும் கண்ணீர் வடிக்கிறார்கள். மாவட்ட அளவிலும் மிகச்சிறந்த வீராங்கனையான பிரியா தனது ஆசை, கனவு எல்லாமே துண்டிக்கப்பட்ட காலுடன் துண்டித்து போனதை எண்ணி எண்ணி கண்ணீர் வடிக்கிறார்.

    சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்-உஷாராணி தம்பதியர். இவர்களின் மகள் தான் பிரியா. இவருக்கு 3 அண்ணன்கள். ஏழை குடும்பமாக இருந்தாலும் பாசத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம். தங்கையின் மீது அண்ணன்கள் அனைவரும் அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்கள்.

    பள்ளியில் படிக்கும்போதே பிரியாவுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. 6-ம் வகுப்பு படிக்கும்போதே கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். அவரது திறமையை பார்த்து உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வந்தனர்.

    பள்ளி அணியில் விளையாடியவர் மாவட்ட அளவிலான அணியில் இடம்பிடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எப்படியும் தேசிய அளவில் மிகச் சிறந்த கால்பந்து வீராங்கனையாக வர வேண்டும் என்பதே பிரியாவின் லட்சியமாக இருந்தது.

    அதற்கு ஏற்ற வகையில் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். தினமும் மைதானத்தில் அவர் கால்பந்து பயிற்சியிலும் ஈடுபடுவது வழக்கம். கடந்த மாதம் 20-ந்தேதி வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டபோது வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது.

    தாங்க முடியாத வலியால் துடித்த தங்கையை பார்த்து அவரது மூத்த அண்ணன் லாரன்சும் துடித்து போயிருக்கிறார். லாரன்சுக்கும் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. உடனே அவர் அந்த நர்சிடம் தொடர்புகொண்டு விசயத்தை கூறி இருக்கிறார்.

    வருங்கால நாத்தனாருக்கு பிரச்சினை என்றதும் அழைத்து வரும்படி கூறியிருக்கிறார். அங்கு பிரியாவின் காலை பரிசோதித்த டாக்டர் காலில் லேசாக ஜவ்வு கிழிந்து இருக்கிறது. லேசர் முறையில் சின்னதாய் ஒரு ஆபரேசன் செய்தால் போதும். சரியாகிவிடும். அவர் முன்பு போல் ஆடலாம், ஓடலாம், விளையாடலாம் என்று கூறி இருக்கிறார்.

    ஆபரேசன் என்றதும் தயங்கி பிரியாவை வேறு சில மருத்துவர்களிடம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. ஒரு வகையிலும் கால் வலி குறையாததால் கடந்த 7-ந்தேதி மீண்டும் பெரியார் நகர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ஆபரேசனுக்கு சம்மதித்துள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் ஆபரேசன் செய்யப்பட்டு தொடை முதல் கால் மூட்டின் கீழ் வரை கட்டுப்போடப்பட்டிருந்ததாகவும் மூட்டு பகுதியில் சதைப்பகுதி கடினமானதாக இருந்ததால் தொடை பகுதியில் இருந்து சதை எடுத்து போட்டிருந்ததாகவும் அதனால் தான் கட்டு பெரிதாக போடப்பட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    ஆபரேசன் செய்த பிறகும் வலி குறைவதற்கு பதில் அதிகரித்துள்ளது. மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. வலியும் குறையவில்லை. உடனே டாக்டர்கள் விலை உயர்ந்த ஊசி போட வேண்டும். எனவே ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

    அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்ட பிரியா ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் கட்டை பிரித்து டாக்டர்கள் பரிசோதித்து இருக்கிறார்கள். அப்போது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

    4 மணிநேரம் ஆபரேசன் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு வெளியே வந்து டாக்டர்கள் கூறியதை கேட்டு எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.

    பிரியாவின் காலில் தொற்று ஏற்பட்டுள்ளது. உடனே காலை துண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி இருக்கிறார்கள். அதை கேட்டு தவித்த குடும்பத்தினர் வேறு வழியில்லாமல் சம்மதித்துள்ளார்கள். நேற்று மாலை பிரியாவின் கால் துண்டித்து அகற்றப்பட்டது.

    கால் இல்லாமல் வெளியே அழைத்து வரப்பட்ட பிரியாவை பார்த்து மொத்த குடும்பமும் கதறி அழுதது. நம் கண்முன் துள்ளிக்குதித்து விளையாடிய மகள் முடமானதை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

    தவறான சிகிச்சையால்தான் தங்கள் மகள் காலை இழந்து விட்டதாக பெற்றோர் புகார் கூறுகிறார்கள். ஆனால் தொடர் சிகிச்சையின் போதே ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்த விசாரணையின்போது உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    வாழ்க்கையில் சோதனையும், வேதனையும் எப்படி எல்லாமோ வருகிறது. பிரியாவின் கால்களால் உதைக்கப்பட்ட பந்து நன்றாக இருக்கிறது. உதைத்த கால்தான் இல்லாமல் போனது.

    Next Story
    ×