search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொள்ளையர்களை பிடிக்க துரத்தியபோது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது- இன்ஸ்பெக்டர் படுகாயம்
    X

    கொள்ளையர்களை பிடிக்க துரத்தியபோது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது- இன்ஸ்பெக்டர் படுகாயம்

    • வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.
    • முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    சூலூர்:

    கோவை அருகே உள்ள சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

    ெதன்னம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் டிரைவர் சிவக்குமார் ஆகியோர் அந்த வாலிபர்களை ரோந்து வாகனத்தில் விரட்டி சென்றனர். 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.

    இதனையடுத்து டிரைவர் சிவக்குமார் வாலிபர்களை பிடிப்பதற்காக அவர்களின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று பின் பக்கத்தில் இடித்தார். அப்போது ரோந்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலது பக்கத்தில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது.

    மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர்கள் இருட்டில் ஓடி தப்பித்தனர். ரோந்து வாகனம் விபத்தில் சிக்கியதில் இன்ஸ்பெக்டர் மாதையனின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை நீலாம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    போலீசார் வாலிபர்கள் விட்டுச் சென்ற கைப்பையை சோதனை செய்தனர். அதில் பட்டாகத்தி, வீடுகளை உடைக்க பயன்படுத்தும் இரும்பி கம்பி 2, ஸ்குரு டிரைவர், கையுறை, 2 டார்ச் லைட், சிறிய கத்தி ஆகியவை இருந்தது. வாலிபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கணியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் (72) என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தவர்கள் யார், எதற்காக செய்தனர் என்று இதுவரை கண்டுபி டிக்கப்படவில்லை. போலீசார் கொலையாளிகளை தேடி வரும் நிலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு கொலை வழக்கில் எதுவும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×